விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும் பாரம்பரியம் உள்ளது. இதன் படி, இந்தாண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு, ஊரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்து, கொடியேற்றப்பட்டு, சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
இன்று காலை, மூலஸ்தானத்தில் அம்மன் மற்றும் சிவபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்து, சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்னர், அம்மன் மயானத்தை நோக்கிப் புறப்பட்டு, அங்கு எழுந்தருளினார்.
அதன்பின், மயானத்தில் குவித்து வைக்கப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை, காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.