Publish Date: Fri, 27 Oct 2023 (09:29 IST)
Updated Date: Fri, 27 Oct 2023 (09:31 IST)
அக்டோபர் 29ம் தேதியன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நடைபெற உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் தோஷம் அடைவார்கள், பரிகாரம் என்ன, என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என பார்ப்போம்.
இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் அக்டோபர் 29ம் தேதி இரவு 1 முதல் 3 மணிக்குள் நிகழ்கிறது.பொதுவாக சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் இருக்க சந்திரன் மூன்றாவதாக ஒரே நேர்கோட்டில் இணையும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் கிரகணம் ஏற்படுகிறது.
எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்?
இந்த முறை சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இதனால் ரேவதி, அஸ்வினி, பரணி, ரோகிணி, மகம் மற்றும் மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம் உண்டாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் சந்திர கிரகணம் அன்று அனுஷ்டானங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலம் தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.
கிரகணத்தின்போது என்ன செய்யக்கூடாது?
பொதுவாகவே கிரகண சமயங்களில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது. கிரகண சமயத்தில் உணவு அருந்துவது செரிமான மண்டலத்தை பாதிக்கும். கிரகண நாளில் அசைவம் சமைப்பதை தவிர்ப்பது நல்லது.
கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறை கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்கலாம்.
கிரகண சமயங்களில் சந்திரனை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் கர்ப்பிணி பெண்கள் கிரகண சமயத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கிரகணம் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்?
கிரகணத்தின்போது கோவில் நடைகளை கூட மூடி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின் சன்னதியை சுத்தம் செய்து, பூஜைகள் நடத்தப்படும். கிரகண அனுஷ்டானங்களை கடைபிடிப்பவர்கள் கிரகணம் முடிந்த மறுநாள் வீடுகளை சுத்தம் செய்து, விளக்கேற்றி வழிபடுவது சிறந்த பலனை தரும்.
சந்திர கிரகணத்தில் தோஷம் உண்டாகும் நட்சத்திரத்தினர் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்ல பலனை தரும்.