Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈரோட்டில் ஜன-14 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (15:07 IST)

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை ஈரோட்டில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர். 

 

 

ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். 

 

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 

 

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், அந்தியூர் ஆகிய இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது. 

 

ஈரோட்டில் ஜனவரி 14 முதல் 16 வரையிலான மூன்று நாட்களில் பெரிய மாரியம்மன் கோவில், ஒயாசிஸ் ரெஸ்டாராண்ட், ஈஷா நர்சரி மற்றும் கணபதி பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் வலம் வர இருக்கிறது.  

 

இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

 

இதனுடன் ‘சிவ யாத்திரை’ எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 மரத்திலான தேர்களை இழுத்தபடி பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். 

 

சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளோடு கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதே போல மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன. 

 

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹால் மற்றும் கோபி சத்தி சாலையில் அக்கரை கொடிவேரியில் அமைந்துள்ள லிங்க பைரவி கோயில் ஆகிய இரண்டு இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. 

 

இவ்விடங்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 

 

அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிருங்கேரி கமண்டல கணபதி கோவில்: வற்றாத நீர் சுரக்கும் அதிசயம்!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள் (18.06.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (17.06.2025)!

வறண்ட உலகிற்கு உயிர் கொடுத்த விநாயகர்: சிருங்கேரி கமண்டல கணபதி திருக்கோவில் சிறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments