ஆடி மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படும் 'ஆடிப்பெருக்கு' அல்லது 'ஆடிப்பதினெட்டு' திருவிழா, தமிழகத்தின் பழமையான மற்றும் தனித்துவமான பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழ் மாதங்களில் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே விழா இதுதான்.
தை மாதத்தில் அறுவடை செய்வதற்கு ஏற்றவாறு, ஆடி மாதத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைப்பார்கள். நீர்நிலைகளை தெய்வமாக மதித்து, அவற்றுக்கு பூஜை செய்து, பின்னர் விவசாயத்தை தொடங்குவார்கள். இந்த சடங்குகள்தான், "ஆடிப் பட்டம் தேடி விதை" என்ற பழமொழியாக மாறியது.
ஆடிப்பெருக்கு தினத்தில் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி, நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜைகள் செய்வார்கள். பலவிதமான கலப்பு சாதங்கள் சமைத்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் உண்பது வழக்கம்.
பழங்காலத்தை போல எல்லா ஆறுகளிலும் நீர் பெருகி ஓடாவிட்டாலும், தமிழக அரசு சில ஆறுகளில் அணைகளை திறந்துவிட்டு, ஆடிப்பெருக்கு விழாவுக்காக நீர் பெருக்கெடுத்து ஓட செய்கிறது. இது தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.