சிலருக்கு வாய் துர்நாற்றம் எப்போதும் இருக்கும். இதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கு கூச்சப்படுவார்கள். இந்த வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
பெரும்பாலும் வாய் துர்நாற்றம் உருவாகும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது தவிர, ஒவ்வொருவரின் உடல்நிலை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பொறுத்தும் காரணங்கள் வேறுபடும். வாய் துர்நாற்றம் உள்ளவர்களில் 80% பேருக்கு வாய் சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்காததே முக்கியக் காரணம்.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்
தினமும் இரண்டு முறை பல் துலக்குவதுடன், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். உணவு சாப்பிட்ட பிறகு வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க, உடலின் எடைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.
எலுமிச்சை சாற்றுடன் பட்டைப் பொடி, சோடா உப்பு, தேன் கலந்து வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்தால் துர்நாற்றம் நீங்கும்.
நன்னாரி வேரை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரில் வாயைக் கொப்பளிக்கலாம். இதேபோல, பட்டை மற்றும் சீரகத்தைக் கொதிக்க வைத்தும் வாய்க் கொப்பளிக்கலாம்.
தினமும் சில துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது துளசி இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிக்கலாம்.