காப்பீட்டு பிரீமியம்கள் மீதான ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மக்களிடையே இன்சூரன்ஸ் எடுப்பதன் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது இன்சூரன்ஸ் திட்டங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Term Insurance எனப்படும் நிதி பாதுகாப்பு வழங்கும் திட்டம்தான். ஒரு குடும்பத்தில் உழைக்கும், பொருளாதார சக்தியாக விளங்கும் நபர் இல்லாமல் போகும் நிலையில் அந்த குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களை நீக்க இந்த டெர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது. விளம்பரங்களில் 1 கோடி வரை டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம் என்ற அறிவிப்புகளை நீங்கள் கண்டிருக்கலாம்.
இந்த டெர்ம் இன்சூரன்ஸில் கவரேஜ் தொகையானது விண்ணப்பிப்பவரின் வயது, சம்பளம், ப்ரீமியம் தொகை, கட்டும் காலம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகின்றன. கூடுமானவரை இளம் வயதிலேயே டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து விடுவது குறைந்த ப்ரீமியத்தில் அதிக கவரேஜ் பெற உதவும். இவ்வாறான டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
சரியான Sum Assured: இது ப்ரீமியம் கட்டுபவர் இல்லாமல் போகும் பட்சத்தில் அவர் குடும்பத்திற்கு எவ்வளவு கவரேஜ் கிடைக்கும் என்பதை குறிக்கிறது. இன்சூரன்ஸ் எடுப்பவர் தனது குடும்பத்திற்கு எதிர்காலத்தில் தேவையான பணம் எவ்வளவு என்பதை கருத்தில் கொண்டு தனது ஆண்டு வருமானத்தில் இருந்து 10-20 மடங்கு வரை கவர் தொகையாக எடுக்க முடியும்.
பாலிசி காலம்: பொதுவாக பல டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் பாலிசியில் ப்ரீமியம் செலுத்தும் காலம் என்பது பணி ஓய்வு வயதான 60 வயது வரை நிர்ணயிக்கப்படும். அப்படி செய்யும்போது மாதம்தோறும் குறைவான தொகையை தொடர்ந்து ப்ரீமியமாக கட்டி வரலாம். 30-35 ஆண்டுகள் வரை மாதம்தோறும் ப்ரீமியம் கட்டுவதை ரிஸ்க்காக நினைப்பவர்கள் 5, 10, 15 என குறைந்த ஆண்டுகளுக்குள் ப்ரீமியம் தொகையை அட்வான்ஸாக கட்டும் வசதியையும் சில பாலிசி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் பாலிசிதாரரின் முழு பாலிசி காலம் இதனால் பாதிக்கப்படாது.
க்ளைம் செட்டில்மெண்ட்: பாலிசி எடுப்பவர்கள் பாலிசி நிறுவனத்தின் CSR எனப்படும் க்ளைம் செட்டில்மெண்ட் ரேஷியோவை கவனிக்க வேண்டும். 100 க்ளைம்களுக்கு எத்தனை செட்டில்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு இந்த சதவீதம் அமையும். 98 சதவீதத்திற்கும் அதிகமான CSR உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது.
ரைடர்ஸ், ஆக்ஸிடெண்ட் கவர்: சில பாலிசிகளில் ஆக்சிடெண்ட் கவர் போன்றவை ரைடராக சேர்த்துக் கொள்ளும்படி இருக்கும். ரைடர் என்பது கூடுதல் அனுகூலம். ஆக்சிடெண்ட் கவர் போன்றவற்றை ரைடராக சேர்க்கும்போது அதற்கு கூடுதல் ப்ரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் விபத்து மரணம் ஏற்பட்டால் கவரேஜ் தொகையோடு, விபத்து காப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையும் சேர்த்து குடும்பத்திற்கு வழங்கப்படும்.
தற்போது காப்பீடுகளுக்கான ப்ரீமியம்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் விலக்கு அளிக்கப்பட்டு விட்டதால் குறைந்த ப்ரீமியமிலேயே நல்ல டெர்ம் இன்சூரன்ஸ்களை பெற முடியும். பல்வேறு நிறுவனங்களும் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட்டு அவரவர் பொருளாதார, ஆண்டு வருமான வரம்பிற்கு ஏற்றபடியான பாலிசிகளை எடுப்பது நல்லது.
Edit by Prasanth.K