Publish Date: Thu, 14 Feb 2019 (19:02 IST)
Updated Date: Thu, 14 Feb 2019 (19:14 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் வருகை தந்ததற்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுல் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று.
இந்நிலையில், பிஎஸ்என்எல் விரைவில் மூடப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் கிளம்பியுள்ளது. பொதுத்துறை நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம் என்ற தகவலும் சில காலங்களாகவே இருந்து வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 2016 - 17ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.4,793 கோடி இழப்பை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஜியோ அறிமுகமான காலக்கட்டம் அது.
மொபைல், லேண்ட்லைன், பிராட்பேண்ட் என அனைத்து சேவைகளை வழங்கினாலும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 2ஜி/3ஜி சேவைகளையே வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்கள் 4ஜி அடுத்து 5ஜி என சென்றுக்கொண்டிருக்கும் போது பிஎஸ்என்எல் 3ஜி-யை வைத்து போட்டியை சமாளிக்க முடியவில்லை.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவது, அல்லது புதுப்பிப்பது மற்றும் அது தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடினால் என்ன ஆகும்? என்று அறிக்கை அளிக்குமாறு அரசு பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாம். இந்த செய்தி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.