வங்கி, இன்சூரன்ஸ், முதலீட்டு நிறுவனங்களுக்கு செல்லும்போதெல்லாம் ஒவ்வொரு விண்ணப்பத்திலும் எத்தனை கையெழுத்து இட வேண்டி உள்ளது? நம் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யும் KYC எனப்படும் க்னோ யுவர் கிளையன்ட் விண்ணப்பத்தை எத்தனை தடவை பூர்த்தி செய்வது? அலுப்பாக இருக்கிறதா? டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இவற்றிற்கு ஒரு தீர்வு ஏற்பட உள்ளது.
நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் (பேப்பர் இல்லா) மின்னணு ஆவணங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.
மின்னணு க்னோ யுவர் கிளையன்ட் எனப்படும் (e-KYC) மற்றும் மின்னணு கையெழுத்து எனப்படும் (e-SIGN) ஆகியவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதன் அவசியம் என்ன?
1. மின்னணு ஆவணங்கள் (PAPERLESS DOCUMENTS) செலவைக் குறைக்கும்:
ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் விண்ணப்பப்படிவங்களில் அவர்களின் கையெழுத்தைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட க்னோ யுவர் கிளையன்ட் (KYC) ஆவணத்தைப் பெற்று, வெவ்வேறு அலுவலகங்களுக்கு அனுப்பவோ, ப்ராசஸ் செய்யவோ காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகின்றன. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் இணையம் மூலம் மின்னணு ஆவணங்களைப் ப்ராசஸ் செய்வது மிக எளியது.
2. மோசடிகளைத் தடுக்கலாம்:
மின்னணு ஆவணங்களை சரிபார்க்க ஒன்டைம் பாஸ்வோர்ட்டை மொபைல் எண்ணுக்கு அனுப்புதல் மற்றும் ஆதார் எண்ணுடன் சரிபார்த்தல் போன்ற டிஜிட்டல் சோதனைகளை மேற்கொள்ளலாம். போலி சான்றிதழ்கள், போலி கையெழுத்துகள் போன்றவற்றால் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் ஏற்படும் இழப்புகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிறது.
3. பொருந்தக்கூடியத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல்:
சராசரி வாடிக்கையாளர் காப்பீட்டு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவன பணியாளர்கள் அறிவுறுத்தும் திட்டங்களை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து கையெழுத்து இடுவர். அந்தப் பணியாளர்களுக்கு கமிஷன் அதிகம் வரக்கூடிய திட்டங்களையே வாடிக்கையாளருக்கு அறிமுகம் செய்வார்கள். இனி இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு பொருந்தக்கூடிய, தேவையான திட்டங்களை வாடிக்கையாளர் தாமாகவே தேர்ந்தெடுத்து, இணையத்திலேயே நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.
தி இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் மற்றும் தி இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் ஆகியவை மின்னணு கையெழுத்துகளைப் பயன்படுத்தலாம் என்ற சட்ட வரைவைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போன், இணையத்தளம் போன்றவற்றை பயன்படுத்தாத இந்தியரே இல்லை எனும் நிலை உருவாகிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் மின்னணு கையெழுத்து மற்றும் மின்னணு க்னோ யுவர் கிளையன்ட் ஆகியவை சாத்தியமே.