Publish Date: Sat, 06 Jul 2019 (12:49 IST)
Updated Date: Sat, 06 Jul 2019 (12:54 IST)
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி, தன்னுடைய ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமாகிய தோனி தற்போது சரிவர விளையாடுவதில்லை என்றும், அவரது ஆட்டம் மந்தமாகி வருகிறது என்றும் பல விமர்சனங்கள் வந்தன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆடிய போட்டிகளில் தோனி 223 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி விடை பெற இருப்பதாக பல வதந்திகள் வெளிவந்தன.
தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தோனி. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தோனி, தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று தனக்கே தெரியாது என்றும், ஆனால் உலகக் கோப்பை முடிவதற்கு முன்பே தான் ஓய்வு பெற வேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர் என்றும் கூறினார்.
இதனை குறித்து சமூக வலைத்தளங்களில், தோனி ஓய்வு பெறுவதை விரும்பவில்லை என்றும், இனி வரும் போட்டிகளில் அவர் தனது பழைய ஃபார்மிற்கு வந்துவிடுவார் என்றும் தோனி ரசிகர்கள் நம்பிக்கை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.