உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தார்.
இந்நிலையில் அவர் மேல் ஒரு பெண் பாலியல் புகார் சுமத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததாகவும், கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்வதாகவும் கூறி தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சம்மந்தப்பட்ட பெண் புகாரளிக்க, காவல்துறையினர் இப்போது யாஷ் மீது பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மேல் போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கவிருந்த டி 20 லீக்கில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருந்த அந்த டி 20 தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணி அவரை 7 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் யாஷ் தயாளால் அந்த தொடரில் பங்கேற்க முடியாது.