Publish Date: Fri, 23 Mar 2018 (15:39 IST)
Updated Date: Fri, 23 Mar 2018 (15:44 IST)
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நடைபெற்று வரும் பகல்- இரவு டெஸ்டில் வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து அணி இரண்டாவது நாளில் 229 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நேற்று ஆக்லாந்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஒவர்களில் 58 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக போல்ட் 6 வீக்கெட்டுகளையும், சவுத்தி 4 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 வீக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் சிறப்பாக விளையாடி தனது 18-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 102 ரன்கள் எடுத்திருந்த போது ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 92.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. நிக்கோலஸ் 49 ரன்னுடனும், வாட்லிங் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.