Publish Date: Mon, 27 Jan 2025 (10:30 IST)
Updated Date: Mon, 27 Jan 2025 (10:36 IST)
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அவர் இடம்பெற்றார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை.
இதற்கானக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஷமிக்குக் காலில் லேசான வீக்கம் இன்னும் இருப்பதால் அவரால் முழு வேகத்தில் பந்து வீச முடியாத சூழல் உள்ளதாகவும் அதனால்தான் அவரை இன்னும் அணியில், எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஷமி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவதுதான் முக்கியம் என்பதால் இப்போது அவரைப் பயன்படுத்தி தேவையிலலாத காயங்கள் ஏற்பட வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.