பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியான நிலையில், இன்று இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று அந்த விருதை வாங்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் நிகழ்வின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு விருது பெறுபவர்களின் அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி வெளியானது.
ஏழு பேர் பத்ம விபூஷன் விருதுக்கும், 19 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 113 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வாகி உள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ரெட்டி ஆகிய மூவருக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்று குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட அஜித் குமார் உட்பட அனைவருக்கும் இந்த விருதை தனது கையால் வழங்க இருக்கிறார்.
இதனை அடுத்து, நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளதாகவும், இன்று நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.