Publish Date: Thu, 09 Jan 2025 (10:42 IST)
Updated Date: Thu, 09 Jan 2025 (11:03 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
அதே போல ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான். அதே போல கோலி அவுட்சைட் ஆஃப் த ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்குத் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார். அதனால் அவர்கள் இருவரும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என இப்போது குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் யுவ்ராஜ் சிங் அவர்கள் இருவருக்கும் ஆதரவாகப் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய அணிக் குறித்து பேசும்போது “ பிப்ரவரியில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருடன் ரோஹித் ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். அதன் பின்னர் இந்திய அணிக்கு முழுநேரக் கேப்டனாக பும்ரா செயல்படுவாரா எனத் தெரியவில்லை. அதனால் மீண்டும் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” எனக் கூறியுள்ளார்.