Publish Date: Thu, 04 Jan 2024 (07:25 IST)
Updated Date: Thu, 04 Jan 2024 (07:26 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய பந்துவீச்சில் சுருண்டது.
அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் கோலி 46 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அதன் பின்னர் சீட்டுக் கட்டு சரிவது போல அடுத்த 6 விக்கெட்களை ரன்கள் எதுவும் எடுக்காமல் மளமளவென இழந்தது. அதுவும் வெறும் 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் குறைந்த பார்ட்னர்ஷிப்பில் கடைசி ஐந்து விக்கெட்களை இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதுவும் பூஜ்யம் ரன்களுக்கு கடைசி ஆறு விக்கெட்களை இழந்து.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 23 விக்கெட்கள் இழந்துள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கெட்கள் விழுந்த மோசமான நாட்களில் இது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 1902 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஒரே நாளில் 25 விக்கெட்கள் விழுந்ததே அதிகபட்சமாக இதுவரை அமைந்துள்ளது.