பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்தை அபாரமாக ஆடி பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ். இந்த ஷாட் பலராலும் வியக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த ஷாட் இதுதான் என்று ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். அந்த ஷாட் பற்றி பேசியுள்ள ஸ்ரேயாஸ் “அந்த யார்க்கருக்கு நான் ஆடிய ஷாட்டை நான் முன்பே பயிற்சி செய்ததில்லை. அன்று நான் நன்கு செட் ஆகியிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு என்ன தோன்றியதோ அந்த ஷாட்டை ஆடினேன். என்னால் அப்போது பேட்டை அந்த பந்துக்கு ஏற்றவாறு திருப்ப முடிந்தது” எனக் கூறியுள்ளார்.