Publish Date: Sat, 01 Feb 2025 (07:17 IST)
Updated Date: Sat, 01 Feb 2025 (07:27 IST)
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடிவருகிறது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகித்த நிலையில் நேற்று நடந்த நான்காவது போட்டியையும் வென்று தொடரைக் கைப்ப்ற்றியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அனியின் ரன்னை உயர்த்தினர். ஷிவம் துபே 54 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களும் சேர்த்தனர்.
இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் ஷிவம் துபேவுக்கு கன்கஷன் ஏற்பட்டதால் அவருக்குப் பதில் ஹர்ஷித் ராணா ஆட்டத்தில் இணைந்தார். அவர் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
ஆனால் இதில்தான் தற்போது சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ஒரு வீரருக்குக் கன்கஷன் ஏற்பட்டு அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்கினால் அவரைப் போன்ற ஒரு வீரரைதான் களமிறக்கவேண்டும். ஒரு பேட்ஸ்மேனுக்கு கன்கஷன் என்றால் மற்றொரு பேட்ஸ்மேனைதான் இறக்கவேண்டும். ஆனால் ஆல்ரவுண்டரான துபேவுக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளரான ராணா இறக்கப்பட்டது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.