Publish Date: Wed, 29 Jan 2025 (08:41 IST)
Updated Date: Wed, 29 Jan 2025 (09:10 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் அபரிவிதமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார். அவர் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர்களில் முதன்மையானவர் டிவில்லியர்ஸ். அவர் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்காக 14 சீசன்கள் ஐபிஎல் தொடர் விளையாடினார். ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் “டிவில்லியர்ஸ் மிகச்சிறந்த வீரர். அவர் தவறான அணிகளில் விளையாடிவிட்டார். அவர் வேறு அணிகளில் இடம்பெற்றிருந்தால் அவரின் உண்மையான எழுச்சியை நாம் பார்த்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.