Publish Date: Mon, 29 Apr 2024 (07:03 IST)
Updated Date: Mon, 29 Apr 2024 (00:01 IST)
நேற்று நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ருத்துராஜ் அதிகபட்சமாக 98 ரன்கள் சேர்த்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பி வந்த 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.
212 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்களை இழந்தது. வழக்கமாக காட்டடி ஆட்டத்தை ஆடும் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் சி எஸ் கே பவுலர்களிடம் சரணடைந்தனர். இதனால் அந்த அணி 18.5 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ள சி எஸ் கே அணியின் கேப்டனும் ஆட்டநாயகனுமான ருத்துராஜ் பேசும்போது “ஈரமான ஆடுகளத்தில் ஆடுவது கடினமாக இருக்கிறது. நான் என்னுடைய சதத்தை அடிக்கவேண்டும் என நினைக்கவில்லை. 220 ரன்களுக்கு மேல் சேர்க்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். இம்பேக்ட் ப்ளேயர் விதியால் 20 ரன்களாவது கூடுதலாக சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்போது நல்ல ஸ்கோர் எதுவென்றே தெரியவில்லை. இப்படி ஒரு சூழலில் ஜடேஜாவின் பவுலிங் (22 ரன்கள்) மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.நான் சீனியர்களிடம் அதை செய் இதை செய் என்று சொல்லும் ஆள் கிடையாது. அவர்கள் தங்கள் வேலையை செய்வதை கடைசி இருக்கையில் பார்க்க வேண்டியதுதான் நம் வேலை” எனக் கூறியுள்ளார்.