Publish Date: Fri, 21 Feb 2025 (07:51 IST)
Updated Date: Fri, 21 Feb 2025 (08:00 IST)
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. ஹிருடாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய தரப்பில், முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து, 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால் எளிதாக வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் அக்ஸர் படேல் பந்தில் வந்த கேட்ச்சை கேப்டன் ரோஹித் ஷர்மா கோட்டை விட்டார். இதனால் அக்ஸர் படேலின் ஹாட்ரிக் சாதனை பறிபோனது.
இதுபற்றி போட்டி முடிந்த பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா “நான் அந்த கேட்ச்சை விட்டதால் அக்ஸருக்கு ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு தவறியது. அதனால் நாளை அவரை டின்னருக்கு அழைத்து சென்று அவரை சமாதானப்படுத்துவேன். நான் அந்த கேட்ச்சை கண்டிப்பாக பிடித்திருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.