Publish Date: Wed, 25 Dec 2024 (07:36 IST)
Updated Date: Wed, 25 Dec 2024 (08:08 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் விளையாட அஸ்வினுக்குப் பதிலாக தனுஷ் கோட்டியான் என்ற இளம் சுழல்பந்து வீச்சாளரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. குல்தீப் மற்றும் அக்ஸர் போன்ற அனுபவம் மிக்க பவுலர்கள் இருக்கும்போது ஏன் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார்.
அதில் “குல்தீப் யாதவ்விடம் விசா இல்லை. அக்ஸர் படேலுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா வர தயாராக இல்லை. அதனால் உடனடியாக ஒரு மாற்று வீரர் வேண்டுமென்பதால் தனுஷை அணியில் சேர்த்தோம். அதனால் சிறந்த வீரர் இல்லை என்று சொல்லமாட்டேன். அவர் உள்நாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.