Publish Date: Fri, 13 Sep 2024 (08:08 IST)
Updated Date: Fri, 13 Sep 2024 (08:13 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
அதனால் அவர் ஏலத்தில் வரும் பட்சத்தில் அவரை எத்தனைக் கோடி கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் அணிக்காக எடுக்க லக்னோ உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அவரை எடுக்க 50 கோடி ரூபாய் வரைக் கொடுக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் அணித்தாவல் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “ரோஹித் ஷர்மா மும்பை அணில் இருந்து விலகும் முடிவில் உள்ளார். அவர் லக்னோ அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதனால் அடுத்த சீசனில் அவர் கண்டிப்பாக மும்பை அணியில் இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.