Publish Date: Fri, 27 Dec 2024 (09:27 IST)
Updated Date: Fri, 27 Dec 2024 (09:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.
ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள் ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளாக மிடில் ஆர்டரில் ஆடிவந்த கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் ஓப்பனராகக் களமிறங்கினார். ஆனாலும் அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளாகவே அவர் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தகக்து. தற்போது இந்திய அணி 39 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.