இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடந்த தொடரில் பாபர் அசாம் மிக மோசமாக விளையாடியதால் அவர் சில புள்ளிகளை இழக்க, ரோஹித் ஷர்மா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஷுப்மன் கில் இருக்க, நான்காவது இடத்தில் கோலியும், எட்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் இருக்கின்றனர்.