Publish Date: Sun, 02 Feb 2020 (14:22 IST)
Updated Date: Sun, 02 Feb 2020 (14:24 IST)
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நடந்து வரும் நிலையில் ரோகித் ஷர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 4 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்றைய கடைசி ஆட்டத்தில் இந்தியா நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. 164 ரன்கள் இலக்கோடு நியூஸிலாந்து களம் இறங்க உள்ளது. இந்தியா பேட்டிங் செய்த போது ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் எடுத்த 60 ரன்கள் மூலம் சர்வதேச போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் இதுவரை ஏழு பேர் இருந்த நிலையில் 8வது நபராக ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். 1998ல் அசாருதீன் முதன்முதலாக 14000 ரன்கள் கடந்து சாதனை புரிந்தார். அதை தொடர்ந்து சச்சின், ட்ராவிட், கங்குலி, சேவாக், தோனி, கோலி ஆகிய வீரர்கள் உள்ளனர்.