இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இது கிரிக்கெட்டின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள தோனியை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அதில் “தோனி டக் அவுட் ஆனாலும், உலகக் கோப்பையை வென்றாலும் ஒரே மாதிரிதான் இருப்பார். வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் அவர் ஒரே மாதிரிதான் இருப்பார். பிக்பாக்கெட் அடிப்பவர்களின் கைகளை விட தோனியின் கைகள் விக்கெட் கீப்பிங் செய்யும் போது வேகமாக செயல்படும்” எனக் கூறியுள்ளார்.