Publish Date: Sat, 29 Mar 2025 (14:06 IST)
Updated Date: Sat, 29 Mar 2025 (14:52 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 17 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தியதே இல்லை என்ற கரையைத் துடைத்துள்ளது.
முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பைத் தந்தார். ஆனால் அணிக்கு அதிக ரன்கள் தேவைப்படும் போது தோனி முன்பாகவே இறங்கி ரன்களை சேர்க்காமல் ஏன் ஒன்பதாவது வீரராகக் களமிறங்குகிறார் என்று விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தோனி களமிறங்கிய போது 16 ஆவது ஓவரில் அவருக்கு ஸ்லிப் பீல்டர்களை நிறுத்தினார் ரஜத் படிதார். இது மிகவும் ஆச்சர்யமாகப் பாரக்கப்பட்டது. இதன் மூலம் தோனியை ஒரு டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன் போல அவர் நடத்தியது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. பலரும் “ரஜத் படிதாருக்கு நக்கல்தான்” எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.