Publish Date: Thu, 07 Mar 2024 (07:23 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (07:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இடையே நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களான ரஜத் படிதார், சர்பராஸ் கான் போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ரஜத் படிதார் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவிலை. அவர் மொத்தமே இந்த சீரிஸில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இன்று தொடங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் கழட்டிவிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் அணிக்குள் அழைக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரிலும், சமீபத்தில் நடந்து வந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
ஆனால் இந்த போட்டிக்கு முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரோஹித் ஷர்மா “ரஜத் படிதார் சிறந்த வீரர். அவரின் திறமையும் அனுகுமுறையும் என்னைக் கவர்ந்துள்ளது. அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதனால் அவருக்கு இன்றைய போட்டியின் பிளேயிங் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.