Publish Date: Mon, 19 Jun 2023 (07:07 IST)
Updated Date: Mon, 19 Jun 2023 (07:18 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வழக்கம் போல தங்கள் பாஸ்பால் கிரிக்கெட்டை ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட்கள் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அடித்து ஆடியது. இதன் மூலம் முதல் நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்.
அதன் பின்னர் ஆடிய ஆஸி. அணி நிதானமாக விளையாடியது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை நல்ல ஸ்கோர் நோக்கி வழிநடத்தினார். நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸி அணி 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 28 ரன்கள் சேர்த்து சொதப்பலான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. கடைசி வரை மழை நிற்காததால் மூன்றாம் நாள் ஆட்டம் அத்தோடு நிறைவுக்கு வந்தது. இன்னும் இரண்டு நாள் போட்டி மீதமிருக்கும் நிலையில் மழை குறுக்கிடாவிட்டால் நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி கிட்ட வாய்ப்பு உள்ளது.