Publish Date: Thu, 15 Feb 2018 (16:19 IST)
Updated Date: Thu, 15 Feb 2018 (16:22 IST)
இந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு ஐசிசி நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரபடா வீசிய பந்தில் ஷிகர் தவன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவானை நோக்கி கையசைத்து விடை கொடுத்த ரபடா பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை காட்டினார்.
இந்நிலையில் ரபடாவின் நடத்தை குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 விழுக்காடு அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே மோசமான நடத்தைக்காக ரபாடா இதுவரை 5 தகுதி இழப்பு புள்ளி பெற்றிருக்கிறார். இந்த புள்ளி எண்ணிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் 8 ஆக உயர்ந்தால், சில சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.