இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸின் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் 1 ரன்களில் ஹென்றி பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த முரளி விஜயும் ஹென்றி பந்திலேயே 9 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி ட்ரெண்ட் போல்ட் பந்தில் 9 பெவிலியன் திரும்பினார்.
இதனால் ஆரம்பத்திலேயே 46 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், புஜாராவுடன் ரஹானே இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தனர். இதற்கிடையில் இருவரும் அரைச்சதம் கடந்தனர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 87 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா 2 வெளியேறினார். அதேபோல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானேவும் 77 ரன்கள் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். ஆல் ரவுண்டர் அஸ்வின் 26 ரன்கள் எடுத்தார்.
முதல்நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. விருத்திமான் சஹாவும், ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், ஜீத்தன் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.