Publish Date: Fri, 25 Apr 2025 (07:10 IST)
Updated Date: Fri, 25 Apr 2025 (07:28 IST)
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த பரபரப்பான டி 20 ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களுர் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
அந்த அணியின் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். கோலி 41 பந்துகளில் 70 ரன்களும், படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
206 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பதிலுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 11 வீதம் ரன்கள் சேர்த்து வந்த அந்த அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்குப் பிறகு தடுமாறத் தொடங்கியது. இறுதியில் துருவ் ஜுரெல் மற்றும் ஷுபம் துபே ஆகியோர் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி சென்றாலும் முக்கியமான நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி வெற்றி பெற்றது. நான்கு விக்கெட்கள் வீழ்த்திய ஹேசில்வுட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.