நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியில் கீழ் வரிசையில் இருக்கும் அணிகளில் ஒன்றாக உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று ஆறு போட்டிகளில் தோற்றுள்ளது.
அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது சூதாட்டப் புகார் குற்றச்சாட்டை வைத்துள்ளார் ராஜஸ்தான் கிரிக்கெட் கமிட்டியின் ஒழுங்குபடுத்துனரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஜெய்தீப் பினானி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது பலக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ள அவர் சில நாட்களுக்கு முன்னர் லக்னோ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அணியினர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் “சொந்த மைதானத்தில் விளையாடும் போது எப்படி அவ்வளவு குறைவான ரன்களை (9 ரன்கள்) ஒரு அணியால் கடைசி ஓவரில் எடுக்க முடியாமல் போகும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் 19 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஷிம்ரான் ஹெட்மெய்ர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் களத்தில் இருந்தும் ஆவேஷ் கான் பந்துவீசி அந்த இலக்கை எட்டவிடாமல் செய்தார்.