Publish Date: Fri, 23 Aug 2024 (07:43 IST)
Updated Date: Fri, 23 Aug 2024 (07:50 IST)
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானாலும், தற்போது மிடில் ஆர்டர் வரிசைக்கு பின்தள்ளப் பட்டுள்ளார் கே எல் ராகுல். அதிலும் டி 20 போட்டிகளில் அவர் அணியில் எடுக்கப்படுவதே இல்லை. சமீபத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையில் கூட அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அவர் இன்று திடீரென்று தான் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு, நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.கிரிக்கெட் எனது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதால் இந்த முடிவு எளிதானது இல்லை.
என் குடும்பத்தினர், நண்பர்கள் சகவீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் களத்திலும் களத்துக்கு வெளியேயும் பெற்ற அனுபவங்கள் விலைமதிப்பற்றவை. என் நாட்டுக்காக விளையாடியதில் நான் பெருமை படுகிறேன்.
என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்ன என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடிய தருணங்களை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார் என்பதால் குழப்பம் நிலவுகிறது.