Publish Date: Mon, 03 Jul 2023 (08:33 IST)
Updated Date: Mon, 03 Jul 2023 (08:35 IST)
ஐபிஎல் போட்டிகளில் இந்த முறைக் கலக்கிய ராஜஸ்தான் அணியின் இளம் ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் 14 போட்டிகளில் அவர் 625 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடக்கம்.
அதே போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை தொடர் ஆகியவற்றிலும் ஜெய்ஸ்வால் கலக்கிவருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போட்டிகளில் ஆக்ரோஷமாக இருப்பது மற்றும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது குறித்து அவர் இப்போது பேசியுள்ளார். அதில் “ஸ்லெட்ஜிங் என்பது இப்போது ஆட்டத்தின் ஒருபகுதியாகிவிட்டது. நானும் போட்டியின் போது ஒரு ஆக்ரோஷ மனநிலையில்தான் இருப்பேன். ஆனால் குடும்பத்தினரைப் பற்றி பேசும்போது அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த துலீப் கோப்பை போட்டியில் எதிரணி வீரரான ரவி தேஜாவை மோசமாக ஸ்லெட்ஜ் செய்ததற்காக ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே, ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.