Publish Date: Sat, 24 Jun 2023 (10:41 IST)
Updated Date: Sat, 24 Jun 2023 (10:44 IST)
ஐபிஎல் போட்டிகளில் இந்த முறைக் கலக்கிய ராஜஸ்தான் அணியின் இளம் ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் 14 போட்டிகளில் அவர் 625 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடக்கம்.
அதே போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை தொடர் ஆகியவற்றிலும் ஜெய்ஸ்வால் கலக்கிவருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி நெகிழ்ச்சியாக அவர் பேசியுள்ளார்.
அதில் “21 ஆண்டுகளாக நான் கண்ட ஒரே கனவு இதுதான். அது இப்போது நனவாகியுள்ளது. ஒவ்வொரு நாள் இரவும் இந்திய ஜெர்ஸி அணிந்து சதமடித்து ரசிகர்கள் முன்னர் கைகளை விரித்து கொண்டாடுவது போல கனவு காண்பேன். எனது வாழ்க்கையை விட கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். எதையும் சாதிக்க தொடர்முயற்சியும் இடைவிடாத பயிற்சியும் தேவை. கிரிக்கெட்டில் இன்னும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.