இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பானத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ராகுல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஜோடி சிறப்பான இன்னிங்ஸைக் கட்டமைத்தது.
இருவருமே சதமடித்து அசத்தினர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 127 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் சேர்த்துள்ளது. கோலி, ரோஹித் இல்லாத இளம் அணி இங்கிலாந்தில் எப்படி விளையாடப் போகிறது என்ற சந்தேகம் இருந்த நிலையில் அதற்குத் தொடரின் முதல் நாளிலேயே பதில் கொடுத்துள்ளது இளம் இந்திய அணி.