Publish Date: Thu, 15 Aug 2019 (09:55 IST)
Updated Date: Thu, 15 Aug 2019 (09:59 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை அதிரடியாக ஆடி கைப்பற்றியது இந்திய அணி.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒரு நாள் தொடரின் இறுதி போட்டி ஃபோர்ட் ஆப்ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி கிரிஸ் கெயிலும், லீவிசும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
2 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தபோதும் மழை குறுக்கிட்டது. இதனால் 35 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 35 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தன. இதன் பின் இந்திய அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக, ரோஹித் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர். ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் கோலி அதிரடியாக ஆடி சதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளில் 65 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
”டக்வொர்த்- லூயிஸ்-ஸ்டெர்ன்” முறைப்படி ஆட்டத்தின் 32.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இந்திய அணி 256 ரன்கள் குவித்து வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் அய்யரை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.