Publish Date: Thu, 08 Dec 2022 (09:01 IST)
Updated Date: Thu, 08 Dec 2022 (07:33 IST)
அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.
இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பேசியதும் மேலும் அதிர்ச்சியை கூட்டியது.
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது பேசியுள்ள ரமீஸ் ராஜா “ பாதுகாப்பு காரணமாக பாக் அணியை எங்கள் அரசு இந்திய அணிக்கு அனுப்ப மறுத்தால், என்ன செய்வீர்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டி தேவை. பிபா உலகக்கோப்பையில் அமெரிக்கா, ஈரான் போட்டி நடத்தப்பட்டது. அப்போது பிபா தலைவர் கால்பந்து பல பிரச்சனகளுக்கு தீர்வு கொடுக்க முடியும் எனக் கூறியதை நாம் கவனிக்க வேண்டும் “ எனக் கூறியுள்ளார்.