Publish Date: Fri, 11 Oct 2024 (10:11 IST)
Updated Date: Fri, 11 Oct 2024 (10:22 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்நிலையில் அவர் ஏலத்துக்கு வந்தால் அவரை எந்த அணி வாங்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர் லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எல்லாமே ஊகங்களாகவே உள்ளது. இந்நிலையில் ரோஹித் ஷர்மா பற்றி பேசியுள்ளார் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்.
அவரது பேச்சில் “ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு வருவாரா அல்லது மும்பை அணியால் தக்கவைக்கப்படுவாரா என்பதைக் காண ஆவலாக உள்ளேன். அவர் ஏலத்துக்கு வந்தால் அனைத்து அணிகளுமே அவரை எடுக்க போட்டி போடுவார்கள். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு இப்போது 37 வயதானாலும் அவரால் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.