Publish Date: Thu, 13 Feb 2025 (13:03 IST)
Updated Date: Thu, 13 Feb 2025 (13:05 IST)
இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் வெற்றி அமைந்திருக்கும். அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து வரிசையான இந்திய டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த நிலையில் இந்த வெற்றிகள் உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளன.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் செய்யபப்ட்ட மாற்றம் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் இறங்கும் கே எல் ராகுல் ஆறாவது இடத்தில் பேட் செய்ய வைக்கப்படுகிறார். அவருக்குப் பதில் அக்ஸர் படேல் ஐந்தாவது இடத்தில் இறக்கப்படுகிறார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இது நிலையான வியூகம் இல்லை என ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். ஏனென்றால் ராகுல் ஐந்தாவது இடத்தில் இறங்கி நிறைய ஸ்கோர்களை சேர்த்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கம்பீர் “முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் வலது கை பேட்ஸ்மேன்களாகவே இருக்க வேண்டுமா? எங்களுக்குப் புள்ளிவிவரம் எல்லாம் பெரிதில்லை. அந்தந்த் நேரத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை பயன்படுத்துகிறோம். அக்ஸர் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாகவே பேட் செய்தார். பேசுபவர்கள் எதையாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.