Publish Date: Thu, 13 Feb 2025 (09:28 IST)
Updated Date: Thu, 13 Feb 2025 (09:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்த தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனை அடுத்து, அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னர் நடந்த டி 20 தொடரையும் 4-1 என்ற கணக்கில் வென்று 2025 ஆம் ஆண்டை வெற்றியோடு தொடங்கியுள்ளது.
தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்ததால் ரோஹித் ஷர்மா மேலெழுந்த விமர்சனங்களுக்கு இந்த வெற்றிகள் பதிலாக அமைந்துள்ளன. பேட்டிங்கிலும் ரோஹித் ஷர்மா சிறப்பாக செயல்பட்டு ஒரு சதத்தை அடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நாங்கள் பெரிய அளவில் எந்த தவறையும் இந்த தொடரில் செய்யவில்லை. ஆனால் இன்னும் சில இடங்களில் நாங்கள் எங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை உங்கள் முன் விவாதிக்க முடியாது. நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வீரர்களிடம் தெளிவாக சொல்லி விடுகிறோம்.” எனப் பேசியுள்ளார்.