Publish Date: Mon, 20 Nov 2023 (07:23 IST)
Updated Date: Mon, 20 Nov 2023 (07:40 IST)
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸி அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த குறைவான இலக்கை வைத்து வெற்றிக்கு போராடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது. ஆனால் அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான் இணை திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி ஆஸி அணியை மீட்டெடுத்தது. இதன் மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியது.
இந்தியாவின் தோல்விக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த போட்டியில் நடுவராக இருந்ததால்தான் இந்திய அணி தோற்றது என தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என இந்திய அணி தோற்ற போட்டிகளில் எல்லாம் இவர்தான் நடுவராக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவர் என சொல்லி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்து அவருக்கு நினைவுப் பரிசு வழங்கும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக குரலெழுப்பினர். அதைப் பார்த்து ஷாக் ஆன ரிச்சர்ட் சிரித்துக் கொண்டே பரிசை வாங்கினார்.