Publish Date: Mon, 20 Nov 2023 (07:06 IST)
Updated Date: Mon, 20 Nov 2023 (07:38 IST)
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸி அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்களை இழந்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு நிதானமாக விளையாடி 43ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 137 ரன்கள் சேர்த்தார்.
வெற்றிகுப் பின்னர் பேசிய ஆஸி அணியின் கேப்டன் பேட்ரிக்ஸ் கம்மின்ஸ் “இப்படி ஒரு சிறந்த போட்டியை விளையாடதான், நாங்கள் எங்கள் சக்தியை சேமித்து வைத்திருந்தோம் என நினைக்கிறேன். இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியது சேஸிங் செய்ய உதவியது. அவர்கள் 300 ரன்கள் அடித்திருந்தாலும் சேஸ் செய்திருப்போம். 300 க்கு மேல் சென்றிருந்தால்தான் சேஸ் செய்வது கடினமாக இருந்திருக்கும்.
வெற்றியோ தோல்வியோ இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடியது மறக்க முடியாத அனுபவம். நாங்கள் சொன்னபடியே ரசிகர்களை அமைதியாக்கி விட்டோம் என நினைக்கிறோம். இந்த ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் மற்றும் உலகக்கோப்பை என அடுத்தடுத்து வென்றது மறக்க முடியாத அனுபவம்” எனக் கூறியுள்ளார்.