Publish Date: Tue, 26 Mar 2024 (07:45 IST)
Updated Date: Tue, 26 Mar 2024 (07:47 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி கடைசி ஓவர் திரில்லராக நடந்து முடிந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் கோலி அவுட் ஆனதும் ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் சாய்ந்தது. அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் ரோம்ரார் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.
போட்டி முடிந்ததும் பேசிய அவர் “என் பேட்டிங் முழுவதுமாக கண்ட்ரோலில் இல்லை. ஆனால் மஹிபால் வந்து ஒரு சிக்சரை அடித்ததும் என் மீதான அழுத்தம் குறைய ஆரம்பித்தது. அவரிடம் அப்படியே விளையாடுமாறு கூறினேன். ஹர்சல் படேலின் மெதுவான பந்துகளை மிஸ் செய்யாமல் ஸ்கூப் செய்யவேண்டுமெனக் காத்திருந்தேன்.” எனக் கூறியுள்ளார்.