Publish Date: Tue, 26 Mar 2024 (07:30 IST)
Updated Date: Tue, 26 Mar 2024 (07:40 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி பரபரப்பாக கடைசி ஓவர் த்ரில்லராக முடிந்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிதான ஆட்டத்தை மேற்கொண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததால் அந்த் அணி இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பேசிய அவரிடம் இரண்டாவது குழந்தை பிறந்ததின் காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கடந்த இரண்டு மாதங்களாக என்னை யாரென்றே தெரியாத ஒரு இடத்தில் இருந்தோம். நான் சாலையில் இறங்கி நடக்கும்போது சாதாரண ஆளாக உணருவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த இரண்டு மாதங்களும் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக் நேரத்தை செலவிட்டேன். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது வித்தியாசமான பொறுப்பாக இருக்கிறது. இந்த இரண்டு மாதத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு வந்து உடனே ரன்கள் குவிப்பது மகிழ்ச்சி. இந்த சத்தம் வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது” எனக் கூறியுள்ளார்.