Publish Date: Tue, 05 Mar 2019 (20:50 IST)
Updated Date: Tue, 05 Mar 2019 (20:53 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை இந்திய அணி குவித்தது. இதில் கேப்டன் விராட் கோலி 120 பந்துகளில் 116 ரன்களைக் குவித்தார்.
கடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த தோனி இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடத் தொடங்கியது.
இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்தில் நுழைந்தார். நேராக ஓடிச்சென்று தோனியை கட்டிப் பிடிக்க முயன்றார்.
அப்போது தோனி ரசிகரிடம் விளையாட்டுக் காட்டும் வகையில் அங்கிருந்து நழுவி வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றார். தொடர்ந்து டோனியை துரத்திச் சென்ற ரசிகர் ஸ்டெம்புக்கு அருகில் தோனியை கட்டிபிடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.