Publish Date: Tue, 07 May 2024 (08:30 IST)
Updated Date: Tue, 07 May 2024 (08:43 IST)
நேற்று முன் தினம் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சி எஸ் கே அணி பேட் செய்து கொண்டிருந்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷர்துல் தாக்கூர் இறங்கி அவுட் ஆன பின்னர்தான் ஒன்பதாவது வீரராக களமிறங்கினார். இறங்கிய வேகத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் தோனி குறித்து முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் “தோனி அன்றைய போட்டியில் ஒன்பதவதாக இறங்க காரணம் அப்போது ஸ்பின்னர்கள் பந்துவீசிக் கொண்டிருந்ததுதான். தோனிக்கு ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் திறமை குறைந்துவிட்டது. அவர் வலைப்பயிற்சியில் கூட வேகப்பந்து வீச்சாளர்களைதான் எதிர்கொள்கிறார். இதுவரை அவர் இந்த சீசனில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களையே எதிர்கொண்டுள்ளார். இதுதான் அவரின் பலகீனம். அவர் அதை சரிசெய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.