நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ருத்துராஜ் வெளியேறிய பிறகு கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணியின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை, சாம் கரணின் அதிரடியால் 190 ரன்களை சேர்த்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்ஷிம்ரான் ஆகியோரின் அதிரடியால் இந்த இலக்கை 20 ஆவது ஓவரில் எட்டியது.
இந்த தோல்வி குறித்துப் போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் தோனி “முதல்முறையாக நாங்கள் ஒரு நல்ல இலக்கை நிர்ணயித்தோம். ஆனால் இந்த மைதானத்தில் இதுவும் போதாது. ஃபீல்டர்கள் நிறைய கேட்ச்களை தவறவிடுகிறார்கள். சாம் கரண் இறுதிவரைப் போராடக் கூடிய ஒரு வீரர். டிவால்ட் பிரவீஸ் மிடில் ஆர்டரில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கக் கூடிய பேட்ஸ்மேன். அவரிடம் நல்ல பந்துகளைக் கூட பவுண்டரிகளாக மாற்றும் திறன் உள்ளது. எதிர்காலத்தில் அவர் சி எஸ் கே அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.