Publish Date: Mon, 21 Feb 2022 (15:03 IST)
Updated Date: Mon, 21 Feb 2022 (15:04 IST)
சென்னை அணியின் தளபதி சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.
அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ரெய்னாவை சி எஸ் கே அணி மீண்டும் எடுக்காதது குறித்து பல விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. சி எஸ் கே அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ரெய்னாவுக்காக ஒரு நன்றி நவிலும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.